வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
பல்வேறு சேவைகள் வழங்குவதை மேம்படுத்தும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் அரசின் திட்டங்கள்/திட்டப் பணிகள்/பணிகளை விரைவாக செயல்படுத்தும் பொருட்டும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்டம் ஜனவரி 2024-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை வருவாய் வட்டத்தில் தங்கி, களப்பணிகளை மேற்கொண்டும், அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டும், பொதுமக்களுடன் கலந்துரையாடியும் அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவர்.
சென்னை நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் புதன்கிழமை “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், முகாம் நடைபெறும் வட்டத்தின் பெயர் மாவட்ட ஆட்சியரால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்படும் இடங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டும், சுணக்கங்களை நீக்கி விரைவில் திட்டங்களை நிறைவு செய்ய ஆவன செய்யப்படுகிறது.
மேற்படி முகாம்கள் நடத்த முகாம் ஒன்றிற்கு ரூ.50,000/- வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.